சவூதி மன்னரின் சிறப்பு விருந்தினர்களாக இலங்கை ஹாஜிகளின் ஹஜ் பயணம்: ஓர் உன்னத அனுபவம்!
இந்த ஆண்டு சவூதி மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸின் சிறப்பு விருந்தினர்களாக இலங்கையிலிருந்து 20 கல்விமான்கள் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளத் தேர்ந்தெடுக்கப்பட்டு, வெற்றிகரமாகப் புனிதப் பயணத்தை முடித்து நாடு திரும்பியுள்ளனர்.
இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் கமூத் அல் கஹ்தானியின் பரிந்துரையின் பேரில், இலங்கையின் கல்விப் புலத்தில் சிறந்து விளங்கும் அறிஞர்கள் இந்தப் புனிதக் குழுவில் இடம்பிடித்திருந்தனர்.
பயண ஏற்பாடுகள் மற்றும் பிரியாவிடை நிகழ்வு
ஹாஜிகளுக்கான பயண ஏற்பாடுகள் மற்றும் பிரியாவிடை நிகழ்வு கடந்த மே 26ஆம் திகதி கொழும்பில் உள்ள சவூதி அரேபிய தூதரகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஹஜ் குழுவினருக்கு மன்னர் சல்மானின் அன்பளிப்பாக, உம்ரா மற்றும் ஹஜ் செய்வதற்கான அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் அடங்கிய பயணப் பையும் வழங்கப்பட்டது.
இதன்போது சவூதி அரேபிய தூதுவர் ஆற்றிய உரையில், புனிதப் பயணத்தின்போது ஹாஜிகள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் ஒழுக்க நியதிகள் குறித்து விளக்கினார்.
சவூதி மன்னர் சல்மான், பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான் மற்றும் சவூதி ஹஜ் விவகார அமைச்சர் ஆகியோருக்கு தனது நெஞ்சார்ந்த நன்றிகளையும் தூதுவர் தெரிவித்தார்.
ஜித்தா முதல் மக்கா வரை அமோக வரவேற்பு
இலங்கை ஹாஜிகள் ஜூன் 30ஆம் திகதி அதிகாலை 3 மணியளவில் புறப்பட்டு, வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு ஜித்தா விமான நிலையத்தைச் சென்றடைந்தனர்.
அங்கு சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகார அமைச்சகத்தால் மன்னரின் விருந்தினர்களுக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்கு மேலதிகமாக ஜித்தாவிலுள்ள இலங்கையின் பதில் கொன்சியூலர் ஜெனரல் மபூஸா லாபீர் இலங்கை ஹாஜிகளை வரவேற்க விமான நிலையம் வந்திருந்தார்.
ஜித்தாவிலிருந்து, மன்னரின் விசேட பேருந்துகள் மூலம் ஹாஜிகள் மக்காவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இலங்கை ஹாஜிகள் மக்காவிலுள்ள மிலேனியம் ஹோட்டேலில் தங்கவைக்கப்பட்டனர்.
இங்கு ரோஜாப் பூக்கள் வழங்கி, சவூதியின் பாரம்பரிய முறையில் ஸம்ஸம் நீர் அளித்து, முகமலர்ச்சியுடன் அரபு பாடல்கள் இசைக்கப்பட்டு, மிகவும் கௌரவமான முறையில் அவர்கள் ஹோட்டலுக்குள் வரவேற்கப்பட்டனர்.
இலங்கை ஹாஜிகள் உம்ரா கடமைகளை நிறைவேற்றுவதற்கான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன. இதனால், அவர்கள் ஹோட்டலை அடைந்த உடனேயே உம்ரா அமல்களை வெற்றிகரமாக முடித்துக் கொண்டனர். அடுத்தபடியாக, ஹாஜிகள் கஃபத்துல்லாஹ்வின் புடவை நெசவு செய்யும் தொழிற்சாலையான கிஸ்வத்துல் காபாவை பார்வையிட அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதன்போது காபா புடவை நெய்யப்படும் முறையை நேரில் பார்வையிட்டனர். இதைத் தொடர்ந்து, குர்ஆன் இறங்கிய இடமான ஜபல் அல்-நூர் மலைக்கும் ஹாஜிகள் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு குர்ஆன் மற்றும் நபிமார்களின் வரலாறு குறித்த விளக்கங்களை மிகத் தெளிவாக வழங்கப்பட்டன.
இதனையடுத்து ஹஜ் கடமைகளை நிறைவேற்றுவதற்காக ஹிஜ்ரி எட்டாம் நாள் மினாவிற்குப் புறப்பட்ட ஹாஜிகளுக்கு, ஹஜ் கடமையோடு சம்பந்தப்பட்ட மன்னரின் இலவச அன்பளிப்புப் பை ஒன்று வழங்கப்பட்டது. அந்தப் பையில் ஹஜ்ஜுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் உள்ளடங்கியிருந்தன.
பின்னர், மன்னரின் விருந்தினர்களான ஹாஜிகள் அனைவரும் விசேட பேருந்துகள் மூலம் மினாவின் வழியாக எட்டாம் நாள் அரஃபாவை நோக்கி அழைத்துச் செல்லப்பட்டனர். அரஃபாவில் அவர்களுக்குச் சிறப்பான வரவேற்பு காத்திருந்தது. ரோஜாப் பூக்கள், ஸம்ஸம் தண்ணீர், அரபுப் பாரம்பரிய கஹ்வா (காபி) மற்றும் இனிப்புப் பண்டங்கள் கொடுத்து அவர்கள் அன்புடன் வரவேற்கப்பட்டு, நல்ல முறையில் தங்கவைக்கப்பட்டனர்.
மூன்று வேளை உணவுகள், படுக்கை விரிப்புகள், நடமாடுவதற்கு வசதியான இடங்கள், சுத்தமான கழிப்பறைகள் மற்றும் ஓய்வெடுப்பதற்கான இடங்கள் என அனைத்து ஏற்பாடுகளும் அவர்களுக்குச் சிறப்பாகச் செய்யப்பட்டிருந்தன. அரஃபா தினத்தில், இலங்கை ஹாஜிகள் உட்பட மன்னரின் விருந்தினர்கள் அனைவரும் தங்கள் அமல்களை மனநிறைவோடு நிறைவேற்றும் அரிய வாய்ப்பைப் பெற்றனர்.
மஃரிப் தொழுகைக்குப் பிறகு, அவர்கள் அங்கிருந்து முஸ்தலிஃபாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கேயும் அவர்களுக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. படுக்கை விரிப்புகள், மூன்று வேளை உணவுகள், துஆக்கள் கேட்கவும், இஸ்திஃபார் செய்யவும், திக்ரு செய்யவும் என இறைவனிடத்தில் ஆத்ம திருப்தியோடு அமல்களைச் செய்யக்கூடிய அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன.
முஸ்தலிஃபாவிலிருந்து புறப்பட்ட ஹாஜிகள், பத்தாம் நாள் மினாவை அடைந்து, ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறியச் சென்றனர். மன்னரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூடாரங்கள் ஜம்ரத்துல் அகபாவிற்கு மிக அருகில் அமைந்திருந்ததால், ஹாஜிகள் இந்த அமலையும் மிகவும் இலகுவாக முடித்துக் கொண்டனர்.
அதே நாளில் நடைபெற வேண்டிய இரண்டாவது முக்கியமான அமலான குர்பானி, மன்னரின் ஏற்பாட்டின் மூலம் ஹாஜிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. மேலும், மூன்றாவது அமலான தலைமுடியை மழிக்கும் அமலும் மன்னரின் விருந்தினர்களுக்கு இலவசமாகவே செய்து கொடுக்கப்பட்டது.
இதன் பிறகு, விருப்பப்பட்ட ஹாஜிகள் மக்காவுக்குச் சென்று தவாஃப் போன்ற அமல்களை முடித்துக்கொண்டு, மினாவில் மீதமுள்ள இரண்டு நாட்களைக் கழிப்பதற்காக மீண்டும் கூடாரங்களுக்குத் திரும்பினர்.
மினாவில் தங்கள் ஹஜ் அமல்களை மனநிறைவோடு முடித்துக்கொண்ட பிறகு, இலங்கை ஹாஜிகள் அனைவரும், மன்னரின் விசேடப் பேருந்துகள் மூலம் மக்காவில் உள்ள கஃபத்துல்லாஹ்விற்கு அருகாமையில் இருக்கும் மில்லேனியம் ஹோட்டலுக்கு மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டு தங்கவைக்கப்பட்டனர்.
பிறகு, ஹாஜிகள் மதீனாவை நோக்கிப் பயணத்தைத் தொடங்கினர். மன்னரின் சிறப்புப் பேருந்துகளிலேயே மதீனாவை அடைந்ததும், அவர்களுக்கு அங்கு ஸம்ஸம் புல் மான் (ZamZam Pullman) என்ற விசேட ஹோட்டல் தயாராக வைக்கப்பட்டிருந்தது.
மதீனாவிலும், சவூதி அரேபிய பாரம்பரிய முறைப்படி, ஹாஜிகள் ரோஜாப் பூக்கள் வழங்கி, கஹ்வா (அரபு காபி) மற்றும் ஸம்ஸம் தண்ணீர் அளித்து, இன்முகத்துடன் அரபு பாடல்கள் இசைக்கப்பட்டு அன்புடன் வரவேற்கப்பட்டு ஹோட்டலில் குடியமர்த்தப்பட்டனர்.
மதீனாவை அடைந்ததும், ஹாஜிகள் ரசூலுல்லாஹி (ஸல்) அவர்களின் ஸியாரதிற்கு செல்ல, மஸ்ஜிதுன் நபவியில் தொழ மற்றும் ஜன்னத்துல் பகீஹ் போன்ற புனித இடங்களைத் தரிசிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இந்த அமல்களை அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடனும், முழுமையான மனநிறைவுடனும் செய்து முடித்து, மஸ்ஜிதுன் நபவியில் அதிகமான தொழுகைகளை நிறைவேற்றும் அரிய வாய்ப்பைப் பெற்றனர்.
அதேவேளையில், மக்காவில் உள்ள 'ஸீரத்துன் நபவிய்யா' (நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாறு) என்ற திரைப்படத்தைப் பார்க்கவும் அவர்கள் இலவசமாக அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு, நபிமார்களின் வரலாறுகள் மற்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்தும் தெளிவாகப் புரிந்துகொள்ளும் வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டது.
மன்னரின் இலங்கை விருந்தினர் குழுவுக்குத் தலைமை தாங்கிச் சென்ற இக்கட்டுரையாளர், சவூதி அரேபியாவில் சுமார் 15 முதல் 20 வருடங்களுக்கு முன்னர் கல்வி பயின்றவர் என்ற முறையில், தற்போதைய சவுதி அரேபியாவின் வளர்ச்சியை வியப்புடன் பார்த்தார்.
இந்தக் குறுகிய காலகட்டத்தில் சவூதி அரேபியா அபாரமான முன்னேற்றத்தை அடைந்திருக்கிறது. சாலைகள், மக்கா மற்றும் மதீனா பள்ளிவாசல்களின் விரிவாக்கங்கள், நவீனமயமாக்கப்பட்ட போக்குவரத்து வசதிகள் எனப் பல துறைகளிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
மேலும், மிகவும் எளிதாகவும், நம்பிக்கையுடனும் வரக்கூடிய ஹாஜிகள் தங்கள் அமல்களை நிறைவேற்றுவதற்கு ஏதுவாக, அனைத்து வசதிகளும் உச்சகட்ட பாதுகாப்புடன் நிரந்தரமாகச் செய்யப்பட்டுள்ளன. இந்த ஏற்பாடுகள் ஹாஜிகளுக்கு மிகவும் உகந்ததாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஹஜ் கடமைகளை முடித்துக்கொண்ட இலங்கை ஹாஜிகள் கடந்த ஜூன் 12ஆம் திகதி மதீனா விமான நிலையத்திலிருந்து நாடு திரும்பினர். இவ்வளவு சிறப்பான வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்த சவூதி மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ், பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான், இஸ்லாமிய விவகாரத்துறை அமைச்சர் அப்துல்லதீப் பின் அப்துல் அஸீஸ் ஆலுச் ஷைக் மற்றும் இலங்கைக்கான சவூதி தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி ஆகியோருக்கு இலங்கை ஹாஜிகளின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துககொள்கின்றோம்.
கலாநிதி அப்துல் சத்தார் (மதனி)
தலைவர் - சவூதி மன்னரின் இலங்கை ஹஜ் குழு - 2025
Comments (0)
Facebook Comments (0)